Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பி.எம்.கேர்ஸ் நிதி ரூ.3,100 கோடி விடுவிப்பு: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்பு!

மே 14, 2020 04:39

சென்னை: “இந்தியாவில் உயர்ந்துவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளும்போது பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3,100 கோடியை ஒதுக்கியுள்ள முடிவு அவசியமானது, வரவேற்கத்தக்கது,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வென்டிலேட்டர் வாங்குவதற்கு ரூ. 2,000 கோடியும், தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக ரூ.100 கோடியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரூ.1,000 கோடியும் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தாமதமாக செய்யப்பட்ட அறிவிப்புதான் எனினும் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3100 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக நிவாரணம் அளிக்க மேலும் நிதியை இதிலிருந்து ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.1,000 கோடியும் அவர்களது பயணச்செலவு, உணவு, அவர்களை தனிமைப்படுத்தித் தங்க வைப்பதற்கான செலவு ஆகியவற்றை சமாளிக்க மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக வேலையின்றி உணவுக்கு வழியுமின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பினாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட இருப்பதால் அவர்களது குடும்பத்தில் அதே வறுமை நிலைதான் நீடிக்கும்.

எனவே, அவர்களது வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு நேரடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ஒரு தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்